Thursday, October 6, 2011

வாடிக்கையாளர்களை வாதைக்கும் வங்கிகள்

வாடிக்கையாளர்களை வாதைக்கும் வங்கிகள்

இன்றைய காலகட்டத்தில், வங்கி கணக்கு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது. அதிலும், மகளிர் மற்றும் ஆடவர் தன் உதவி குழுக்கள் நாள்தோறும் புதிது புதிதாய் வங்கிகளை நாடிய வண்ணம் இருந்து வருகின்றன. அரசு ஊழியர்களின் மாதாந்திர சம்பளம் வங்கிகள் மூலமாகவே வழங்கப்பட்டு வருவதால், வங்கிகளில் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை.

வாடிக்கையாளர்களின் தேவையை செய்ய வங்கிகளும், தன் பங்கிற்க்கு தொழில் நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி கொண்டிருக்கின்றன. பதிவேடுகள் கணினி மயம் ஆக்கப்பட்டு இணைய வங்கியாக தேசத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் வங்கிக் கணக்கில் மாற்றம் செய்து கொள்ளலாம். பணம் எடுக்க வரிசையில் வங்கியில் நிற்காமல், நினைத்த நேரத்தில், செல்லுமிடமெல்லாம் பணம் வழங்கும் இயந்திரம் மூலம் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். இவையெல்லாம் அறிவியல் வளர்ச்சியின் மூலம் வழங்கப்படும் வங்கிச் சேவையாகும். இந்தச் சேவைகளை வாடிக்கையாளரின் தேவைக்கு ஏற்ப வங்கியாளர்கள் வழங்கிவருகிறார்களா? என்பது தான் இன்றைய கேள்வி அனைத்து பொதுத்துறை வங்கிகளும், வாடிக்கையாளர்களை ஒரு பொருட்டாகவே எண்ணுவதில்லை.


வாடிக்கையாளர்கள் இல்லையேல் வங்கிகள் செயல்பட முடியாது . இதை ஏனோ வங்கியாளர்கள் உணர மறுக்கிறார்கள். வாடிக்கையாளர்களின் பல்வேறு சேவைகளால் பெறப்படும் கமிசனில்தான், இவர்ளுக்கு சம்பளம் தரப்படுகிறது, என்பதை மறந்து விடுகிறார்கள்.


ஒருவர் ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கேட்பு வரைவோலை எடுக்க வேண்டுமானால் , அந்த வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தால் ஒரு தொகையும், வங்கிக் கணக்கு இல்லாதிருந்தால், வேறொரு தொகை வசூலிப்பது எந்த விதத்தில் சரியாகும். ஒவ்வொரு வங்கிகளும் சேவைக் கட்டணம் நிர்ணயித்திருப்பது, ஒவ்வொரு விதமாக இருக்கிறது. உதாரணமாக ஓருவர் குறைந்த தொகையான நூறு ரூபாயை தபால் அலுவலகம் மூலம் “பண அஞ்சல்” அனுப்பும் போது சேவைக் கட்டணம் ரூபாய் ஐந்து வசூலிக்கப்படுகிறது. அதே நூறு ரூபாயை தேசிய வங்கிகளில் கேட்பு வரைவோலையாக எடுக்கும் போது குறைந்தபட்ச சேவைக் கட்டணமாக நாற்பது ரூபாய் வசூலிக்கப்படுகிறது. பெரிய தொகையாக இருக்கும்போது வங்கிகளின் சேவைக் கட்டணம் குறைவாக இருப்பது, பெரு வணிகர்களுக்கு பெருமளவில் பயன்படலாம்.


சிற்றூர் மக்கள் பெருமளவில் வாழ்ந்துவரும் நம் நாட்டில், தேசிய வங்கிகள். வாடிக்கையாளர்களை வஞ்சித்துக் வருவது வேதனையான செயலாகும். பெருந் தொழில் அதிபர்களிடம் காட்டும் அக்கறையை கீழ்தட்டு மக்களிடமும் திருப்பினால் நன்றாக இருக்கும். ஒரு சில நிறுவனங்கள் மற்றும் அரசாங்க சேவைக்காக பணத்தை நேரடியாக செலுத்த முடியாமல் டிடி-யாக மட்டுமே செலுத்தும் கட்டாய சூழல் ஏற்படுகிறது. சிறு தொகைக்கு, அதன் பயன்பாடுகளுக்கு ஏற்ப சேவைக் கட்டணத்தை குறைத்தால், பொதுமக்கள் பயன் பெறுவர்.

பல்வேறு கட்டமைப்பு வசதிகளுடன் வங்கிகள் காலத்துக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. பலர் வங்கியை பயன்படுத்தி வந்தாலும், அந்த வாடிக்கையாளர்களை சிறு துறும்பாக எண்ணிவருவது ஆரோக்கியமானதாக தெரியவில்லை. வங்கிச் சேவைக்காக மணிக்கணக்கில் காத்து இருக்க வேண்டிய அவல நிலை உருவாகிறது. இத்தகைய காத்திருப்பின்போது, அவசர இயற்கை அழைப்பான சிறுநீர் மற்றும் கழிப்பிட வசதி வாடிக்கையாளர்களுக்கு செய்து தரபடுவதில்லை. தாகத்திற்க்கு தண்ணீர் கூட ஒரு சில வங்கிகளில் வைத்திருப்பதில்லை. எந்தவித அத்தியாவசிய தேவைகளையும், எதிர்பாராதிருக்க வாடிக்கையாளர்களும் பழக்கப்பட்டு விட்டார்கள். மனித நேயத்துடன் வாடிக்கையாளர்களின் காத்திருக்கும் நேரத்தை பயனள்ளதாக மாற்றியமைக்க வங்கியாளர்கள் முன்வரவேண்டும்.

ஒரு சில வங்கிகளில், சரியான தகவல்கள் ஏழுதப்படாமல் இருப்பதால், எந்த வரிசையில், எந்த சேவைகள் அளிக்கப்படுகின்றன, என தெரியாமல் போய் விடுகிறது. மணிக்கனக்கில் காத்திருந்த பிறகு வேறு ஒரு வரிசையில் நிற்கவேண்டிய அவல நிலை உருவாகி விடுகிறது. ஒரு சில வாடிக்கையாளரைத் தவிர பெரும்பாலானோர் எந்தச் சேவை, எந்த கவுண்டரில் தரப்படுகிறது என்பது தெரியாமல், தங்களின ;நேரம் வீனாவதோடு மட்டுமல்லாமல், மன உளைச்சலுக்கும் ஆளாக நேர்கிறது. எந்த ஒரு வங்கியிலும் அலுவலர்கள், வாடிக்கையாளர்களின் சந்தேகங்களுக்கு, பொறுமையாக பதில் சொல்வதில்லை. பெரும்பாலான நேரங்களில், நேர் விரோதிகளிடம் நடந்து கொள்ளும் சூழலே இருந்து வருகிறது. வாடிக்கையாளர்கள் அதிகம் இருப்பதால், அதற்க்கு ஏற்ப பணியாற்றும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும், அதை விடுத்து வங்கிச் சேவைக்கு வருவோரை தேவையற்ற முறையில் அலைகழிப்பது நாகரீகமான செயல் அன்று.

வங்கிச் சேவையில் பலப்பல மாறுதல்களை உருவாக்க, வாடிக்கையாளர்களின் தேவையை விரிவுபடுத்தி வருவதை வரவேற்க்க வேண்டும் . அதே நேரத்தில், வாடிக்கையாளர்கள் பற்றி அண்ணல் காந்தியடிக்ள கூறியிருக்கும் கருத்துக்களை, வங்கியாளர்கள் மனதில் இருத்தி, ஒருங்கினைத்தால் மகிழ்வார்கள். வங்கியாளர்களும், வாடிக்கையாளர்களும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் காலம் வந்தால் இருவருக்கும் நல்லது.

No comments: