கைப்பேசி... வாகனம்... சாலை விபத்து...!?

இன்றைய வலைதள கணினி யுகத்தில் கைபேசிக்கும், வாகனத்திற்கும், சாலை விபத்துகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை பார்க்க முடிகிறது. 

அதிவேக சூழலில், இன்றைய வாழ்க்கை முறை ஓடிக்கொண்டிருப்பதால், கைபேசியையும், வாகனத்தையும் தவிர்க்க முடியாத சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 

சாலை கட்டமைப்பு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு, அதிநவீன கட்டுமான பொறியியல் சிறப்புடன், வாகன போக்குவரத்திற்கு எளிதில் எல்லோருக்கும் வாய்ந்திருக்கிறது. 

இத்தகைய சூழலில், சிறுவர் முதல் பெரியவர் வரை, வசதி வாய்ப்பு வரையறை இல்லாமல், எல்லோரும் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை இயக்க வேண்டிய சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 

18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டிய வாகனங்களை, சிறார்கள் பயன்படுத்துவதை கண்டிக்காத, தடுக்காத, பெற்றோர்கள் பெருகிவிட்டார்கள். 

சாலைப் போக்குவரத்து விதிகள் எல்லோருக்கும் பொதுவானவை. இருந்த போதிலும், யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், நேரத்திற்கு தகுந்தாற்போல் வாகனங்களை ஓட்டலாம் என்ற நிலை பெறுவாரியான இடங்களில் இருப்பதை பார்க்க முடிகிறது. 

அதிவேகமாக வாகனங்களை இயக்கினால் அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது. வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்கினால் சட்டப்படி தண்டிக்கப்படலாம். சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தினால் அபராதம் விதிக்கலாம். இப்படி எல்லாவற்றிற்கும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த சட்ட வழிமுறைகள் முறையாக நடைமுறையில் பின்பற்றப்படுகிறதா?  என்பதை சிந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது. 

இன்றைய நிலையில் சாலையில் கைபேசி பேசாமல் வாகனத்தை ஓட்டுபவர்கள் ஒரு சிலர் மட்டுமே. 

நூற்றுக்கு 99 பேர் கைபேசியை ஏதோ ஒரு வகையில் பயன்படுத்திக் கொண்டே, பயணத்தை மேற்கொள்கிறார்கள். பயணத்தின் போதே, பல்வேறு தகவல்களை சேகரிக்கிறார்கள், அதற்கு ஏற்ப செயல்படுகிறார்கள். 

சாலையில் வாகனம் ஓட்டிக் கொண்டு செல்லும்போது, கைபேசியின் செய்திகளின் தன்மையை பொறுத்து, வாகன ஓட்டிகளின் கவனம், அவர்களை அறியாமல் அவர்களிடம் இருந்து சென்று விடுகிறது. 

சாலையில் எதிர்வரும் வாகனங்களின் போக்கையோ, இவர்களுக்கு பின்னால் வரும் வாகனங்களின் வருகையையோ, இவர்களால் எண்ணிப் பார்க்க முடியாத நிலையில், இவர்கள் வாகனத்தை ஓட்டிக்கொண்டு செல்கிறார்கள். 

சாலையில் திடீரென நிறுத்துவதும், சைகை செய்யாமல், இடது வலது பக்கங்களில் திரும்புவதும் சாதாரண நிகழ்வாக ஆகிவிட்டது. இதனால், எதிரில் வருபவர்களும், பின்னால் வருபவர்களும், நிலைகுலைந்து செய்வதறியாது, விபத்தில் சிக்கும் அவல நிலை ஏற்படுகிறது. 

வாகனத்தை இயக்கும் போது, கைபேசியில் அவசர செய்தியை அடுத்தவருடன் பேச வேண்டிய நிலை ஏற்படும் போது, வாகனத்தை சாலையின் ஓரமாக பாதுகாப்பான முறையில் நிறுத்திய பிறகு பேசலாம், என்ற மனநிலை ஒருவருக்கும் இல்லாத சூழலில், இன்றைய சாலை பயணம், விபத்து பயணமாக மாறிக்கொண்டிருக்கிறது. 

இருசக்கர வாகனத்தை சாலையில் பயன்படுத்த வேண்டும் என்றால், ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதுடன், வாகனத்தில் பயணிப்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும். மேலும், தலைக்கவசத்தில் பெல்ட் போட்டிருக்க வேண்டும். 

நான்கு சக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள், அவசியம் சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும். இவைகள் புதிய வழிமுறைகள் அல்ல. பயணிகளை பாதுகாக்கும் அணிகலன்கள் என்பதை ஒவ்வொருவரும் அறிந்து அதன்படி நடந்திட வேண்டும். 

வாகனங்களில் அளவுக்கு அதிகமான ஒலியெழுப்பும் ஒலிப்பான்களை சட்டத்தின் மூலம் தடை செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், சாலையில் பயணிப்போரை அதிர வைக்கும் அளவிற்கு, ஒலிப்பான்களை ஒலித்துக் கொண்டு செல்லும் ஓட்டுநர்களை பார்க்க முடிகிறது. 

மருத்துவமனைகள், பள்ளிகள், தேவாலயங்கள் இருக்கும் இடங்களில் அதிக வேகங்களில் செல்லக்கூடாது. அத்தகைய இடங்களில் தேவையற்ற சூழலில், ஒளிப்பான்களை பயன்படுத்தக் கூடாது என்ற விதிமுறை இருந்த போதிலும், விதிமீறல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. 

சட்டத்தை செயல்படுத்தும் போக்குவரத்து காவல்துறை, எவ்வளவு தான் முயற்சி எடுத்தாலும், சாலை விதி மீறல்களை முழுமையாக கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. 

தமிழகத்தை தாண்டி பிற மாநிலங்களில், சிறிய அளவிலான சாலை விதி மீறல்களுக்கும், அதற்கேற்ப தண்டனை அப்போதே வழங்கப்படும். எந்த சூழலிலும், சாலையில் நடக்கும் விதி மீறல்களை ஒருபோதும் அனுமதிப்பதில்லை. 

ஆனால், நம் தமிழகத்தில் அத்தகைய கடுமையான சட்டத்தை அமல்படுத்தக்கூடிய நிலையில் காவல்துறை செயல்படவில்லை. பல்வேறு நிலைகளில், நீதிமன்றம் வலியுறுத்திய பிறகும், காவல்துறையால் செயல்படுத்த முடியாத கையறு நிலையை காண முடிகிறது. 

மக்களாக மாறுவார்கள், சாலை விதிகளை கடைப்பிடிப்பார்கள் என்ற சூழல் தமிழகத்தில் தென்படவில்லை. சட்டத்தின் மூலம் மட்டுமே, அதனை கட்டுப்படுத்த முடியும். எனவே, காவல்துறை எவ்வித தளர்வும் இல்லாமல், சாலையில் நடக்கும் விதி மிலர் மீறல்களை, சட்டத்தின் பிடியில் கொண்டு வந்து தண்டிக்க முன்வர வேண்டும். 

வெறுமனே சட்டத்தை இயற்றினால் மட்டும் பயனளிக்காது. அந்த சட்ட விதிமுறைகளை தேவையான இடங்களில் பயன்படுத்தினால் தான் அந்த சட்டத்திற்கு மதிப்பு உண்டு. 

சாலை விபத்துக்கள், வாகனங்கள் வேறு வாகனங்களுடன் மோதும் போது ஏற்படுகிறது. வாகனங்கள் சாலையில் நிறுத்தப்பட்டு இருக்கும் வாகனங்கள் மீது மோதும் போது ஏற்படுகிறது. வாகனங்களை சாலை விதிகளை மீறி இயக்கும் போதும் விபத்து ஏற்படுகிறது. 

இப்படி ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விதமாக, சாலை விபத்துக்கள் நடந்து கொண்டே இருக்கிறது. இதனால் உயிர்ப்பலி அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

 தினசரிகளிலும் தொலைக்காட்சிகளிலும், இத்தகைய சாலை விபத்து செய்திகளை பார்த்த போதிலும், பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள முடியவில்லை. 

சட்டத்தை மதித்து அதன் வழிமுறைகளை கடைப்பிடித்து வாழும் நடைமுறை, இன்றைய தலைமுறையிடம் குறைந்து வருகிறது. 

பொதுவெளியில் வரும்போது நமக்குள்ள உரிமைகள், பிறர்க்கும் உள்ளது என்பதை ஒவ்வொருவரும் சிந்தித்து செயல்பட வேண்டும். 

அதிக வேகத்திறன் கொண்ட இருசக்கர வாகனங்களை, தங்கள் பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுப்பதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும். 

அதிவேகப் பயணம் பெருமைக்குரியதல்ல, என்பதை ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்கு எடுத்துக் கூற வேண்டும். தேவைப்படும்போது மட்டுமே வாகனங்களை பயன்படுத்தும் கலையை கற்றுத் தர வேண்டும். 

இன்றைய சாலை விபத்துகளின் கணிப்புகள்,  40 விழுக்காட்டிற்கு மேல் இளைஞர்கள் சாலை விபத்துகளில் பலியாகிறார்கள் என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. 

சாலை விபத்தில் இறப்பவர் தனிநபர் அல்ல. அவரை சார்ந்து அவர் குடும்பம் இருக்கிறது. அவரின் எதிர்கால வளர்ச்சி இருக்கிறது. இது ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்ற புரிதலை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். 

ஒவ்வொரு வாகனங்களிலும் அதன்அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும், தடுக்க வேண்டும். சட்டத்தின் பிடியில் அதை கொண்டு வர வேண்டும். 

சாலையில் வேண்டாம் சாகச பயணம் என்ற தாரக மந்திரத்தை ஒவ்வொரு பெற்றோரும், தங்கள் பிள்ளைகளுக்கு நாளும் பொழுதும் நினைவு கூற வேண்டும். 

ரத்த தானம் செய்வது, அவசிய தேவைக்கு மருத்துவமனையில்  இருப்பவரின் உயிரை காப்பாற்றும்.ஆனால் அனாவசிய சாலை விபத்தில், நம் ரத்தத்தை சாலையில் சிந்தும் போது, நம் உயிரைப் பறிக்கும். 

சட்டத்தை மதித்து நடக்கும் இளைய தலைமுறையை உருவாக்க வேண்டும். அதற்கு ஒவ்வொருவரின் பங்களிப்பும் அவசியம் இருக்க வேண்டும்.

தனிமனித கட்டுப்பாடு, சட்டத்தை மதித்து செயல்படும் மனப்பக்குவம், ஒருவரை மதித்து ஒருவர் செயல்படும் மனநிலை, இப்படி உயர்வான எண்ணங்களை ஒவ்வொருவரும் மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். 

மனித உயிர் விலைமதிப்பற்றது. அதுபோல் ஒவ்வொரு நாளும், அரியதொரு வாய்ப்பை நமக்கு கொடுத்து வருகிறது.

 இத்தகைய சூழலில், இந்த சமுதாயத்திற்கு பயன்படும் வகையில், நம்மை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.  

விபத்தில்லா பயணம் சாத்தியமே, அதை ஒவ்வொருவரும் கடைப்பிடிக்கும் போது. அந்த நாள் வரும்போது, சாலையில் விபத்துக்கள் குறைவதுடன்  மரணத்திற்கு மரணம் வரும்.

பொறிஞர் ப நரசிம்மன், தருமபுரி 

மாண்புமிகு மக்கள் 

தமிழக சட்டப்பேரவைக்கு 2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் பல்வேறு பாடங்களை தந்திருக்கிறது.

 குறிப்பாக 60 ஆண்டு காலமாக ஆண்டு வந்த திராவிட கட்சிகளுக்கு மாற்று தலைமை வேண்டும் என்ற குரல் மாண்புமிகு மக்கள் வாயிலாக வளமாக ஒலித்திருக்கிறது.

 இதன் எதிரொளியாக புதியதாக அரசியல் களத்தில் இறங்கியவர்கள் பெருவாரியான தொகுதிகளை வென்றிருக்கிறார்கள்.

 இந்த முடிவு ஏதோ மாயாஜாலத்தாலோ மந்திரத்தாலோ நிகழவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

 மக்கள் விரும்பும் ஆட்சியை ஏற்கனவே ஆண்ட கட்சிகள் தருவதில் இருந்து தடம் புரண்டு சென்றுவிட்டார்கள் என்பதற்கான எச்சரிக்கையாக இதனை எடுத்துக் கொள்ள வேண்டும்.

 அதேபோல் புதியதாக ஒருவரை ஆட்சிக்கட்டியில் அமர வைக்க நினைத்தவர்களும், முழுமையான பலம் பொருந்திய ஆட்சியாக அமைய விடாமல் 108 சட்டப்பேரவை உறுப்பினர்களை கொடுத்து ஒட்டுமொத்தமாக அதிக எண்ணிக்கையிலான சட்டப்பேரவை உறுப்பினர்களை கொண்ட கட்சியாக மாண்புமிகு மக்கள் கொடுத்திருக்கிறார்கள்.

 இந்த முடிவுகள் சாமானிய மக்களால் கொடுக்கப்பட்டிருக்கும் சூழலில், மெத்த படித்த மேதாவிகளால் அறிந்து கொள்ள முடியாத நிலை ஆகிவிட்டது. அதன் எதிரொள்ளியாகத்தான் கருத்துக்கணிப்புகளும் இதனை கண்டறிய இயலாமல் போனது.
 
பெரும்பான்மையான சட்டப்பேரவை உறுப்பினர்களாக கொண்டுள்ள அந்த புதிய அரசியல் கட்சிக்கு கூட இந்த வெற்றி புதிராகத்தான் இருந்திருக்கும்.

 ஒன்று 234 தொகுதிகளிலும் வெல்வோம் அல்லது பத்து இருபது தொகுதிகளிலாவது நாம் வெற்றி பெறுவோம் என்று எண்ணி இருக்கலாம். ஆனால் கள நிலவரம் மக்களின் மனநிலை 60 ஆண்டு காலம் ஆட்சி செய்த கட்சிகளை அப்புறப்படுத்தி விட்டது.

 இதில் மிக முக்கியமாக நாம் பார்க்க வேண்டிய செய்திகள் நிறைய இருக்கின்றன. மாண்புமிகு மக்கள் ஆழமாக அதே சமயத்தில் அழுத்தமான கருத்துக்களை தங்களின் வாக்குகளின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
 சாமானிய மக்கள் சாதித்து காட்டியிருக்கிறார்கள்.

 இவர்களுக்கு என்ன தெரியும் நூறு ரூபாயோ 500 ரூபாயோ ஆயிரம் ரூபாய் கொடுத்தால் அடிமை போல் நம் பின்னால் வருவான் என்ற ஏலன பேச்சை எடுத்து எறிந்து இருக்கிறார்கள்.

 எங்களுக்கும் சக்தி உள்ளது அது நேரு அவர்கள் தந்த ஓட்டுரிமை எனும் மகத்தான சக்தி அதன் மூலம் எங்கள் வலிமையை காட்டுவோம் என்று மனதுக்குள்ளேயே யாருக்கும் தெரியாமல் மௌனமாக சொல்லியிருக்கிறார்கள்.

 முதலாவதாக 108 சட்டப்பேரவை உறுப்பினர்களை புதிய கட்சிக்கு தந்த மாண்புமிகு மக்கள் அந்தக் கட்சியை மட்டும் அல்லாமல் மற்ற கட்சிகளையும் சுய பரிசோதனை செய்து கொள்ள வழிவகை செய்திருக்கிறார்கள்.

 பொதுவாக பிள்ளையார் கோயிலில் வேண்டுதலுக்காக 108 தேங்காய் உடைப்பதாக வேண்டிக் கொள்வார்கள் பக்தர்கள். ஆனால், இந்த புதிய கட்சிக்கு 108 சட்டப்பேரவை உறுப்பினர்கள் கிடைத்ததாலோ என்னவோ, தினம் தினம் அவர்களும் திண்டாடுகிறார்கள். அவர்களை நம்பிய மக்களும் புரியாமல் நிற்கிறார்கள். மற்ற கட்சிகளின் தலையும் உடைந்து கொண்டிருக்கிறது.

 ஒரு நாள் இரண்டு நாள் அல்ல ஒவ்வொரு நாளும் புதுப்புது வழிகளில் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. இதனால் அவர்களும் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியும் முடியாமல் முட்டி மோதி கொண்டிருக்கிறார்கள்.

 எங்கோ ஒரு மூலையில் இருந்த எளிய வாழ்க்கை வாழ்ந்த அறிமுகமே இல்லாத ஒருவரை வேட்பாளராக நிறுத்தி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்து அவரை மாண்புமிகு அமைச்சராகவும் ஆக்கியிருக்கிறது இந்த புதிய கட்சி.

 அந்த அளவிற்கு மக்களின் மனதில் பதிந்த அந்த கட்சி மாற்றுக் கட்சியினரை மடக்கிப் பிடிப்பதில் தங்களுக்கு பெருமை என்று எண்ணி சிறுமையில் சிக்கிக் கொண்டு வருவது சரியான பாதையல்ல.

 இரண்டாவது, மாற்றுக் கட்சியில் ஒருவர் இருந்தால் அவர் குற்றவாளி ஊழல் செய்பவர். அவரே தமது கட்சியில் சேர்ந்தவுடன் நிரபராதியாகவும் நேர்மையானவராகவும் சித்தரிக்கப்படும் போக்கு, இந்த புதிய கட்சியிலும் தொடர்ந்து கொண்டிருப்பது, புற்றுநோய் போல தம்மை அழித்துவிடும் என்ற அறியாமை இல்லாத போக்கையே வெளிப்படுத்துகிறது.

 மூன்றாவதாக, சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட மூவர், 21 நாட்களே நாட்களிலேயே பதவியை ராஜினாமா செய்துவிட்டு புதிய கட்சியில் இணைந்து இருக்கிறார்கள்.

 இவர்களை நம்பி, இவர்கள் சார்ந்த கூட்டணியை நம்பி, இவர்களை நிறுத்திய கட்சியை நம்பி வாக்களித்த மக்கள் மக்களின் நம்பிக்கையை, தங்களின் சுய இலாபத்திற்காக புறந்தள்ளி இருக்கிறார்கள்.

 நான்காவது, ஒரு அணியாக தேர்தலில் போட்டியிட்ட பல்வேறு கட்சிகள் தோல்வியை கண்டவுடன், எதிர் அணியுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியில் அங்கம் வகிக்கும் அவல நிலை தொடர்வது நல்லதல்ல.

 இவர்களை நம்பி இவர்களுக்கு வாக்களித்த மக்கள், இவர்கள் எதை சொல்லி மக்கள் முன் நின்றார்களோ, அதை நம்பிதான் அவர்களுக்கு வாக்களித்தார்கள்.

 அதற்கு மாறாக வெற்றி பெற்றவுடன் அந்தக் கூட்டணியை புறந்தள்ளிவிட்டு வேறு ஒரு கூட்டணியில் இணைவது சட்டத்திற்கு புறம்பானது.

 அந்த மக்களின் நம்பிக்கையை நீர்த்துப்போக செய்யும் தவறான செயல் என்பதை உணர மறுக்கிறார்கள்.

 ஐந்தாவது, தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்துவதும், தேர்தலை வெற்றி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்குவது மட்டுமே வேலை என்று இல்லாமல், அந்த அந்த சட்டமன்ற உறுப்பினர் தான் சார்ந்த கட்சியில் இருந்து வேற்றுக்கட்சிக்கு செல்வதை ஏற்றுக்கொள்ளக் கூடாது.

 அந்த சட்டமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு கொடுக்கப்பட வேண்டும். அதேபோல், ஒரு அணியாக தேர்தல் களத்தில் போட்டியிட்டவர்கள் தேர்தலுக்குப் பிறகு, வேறு அணிக்கு செல்வதை தடை செய்ய வேண்டும்.

 இதற்கான சட்டத்தை சட்ட முன்னெடுப்பை உருவாக்க வேண்டும். மக்களின் நம்பிக்கையை இதன் மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.

 அதேபோல் ஒரு கட்சி என்னென்ன வாக்குறுதிகளை மக்களிடம் கொடுத்ததோ, அதனை செய்கின்றதா? செய்து வருகிறதா? என்பதை கணித்து அவர்களின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் நிலைக்கும் தேர்தல் ஆணையம் செல்ல வேண்டும்.

 இதன் மூலம் சாத்தியம் இல்லாத, மக்களை தன் பக்கம் ஈர்க்கும் வகையில் மலிவான வாக்குறுதிகளை கொடுக்கும் நிலையை மாற்ற வேண்டும்.

 இறுதியாக, மக்கள் பெரிதும் அரசியல் புரிதல் இல்லாமல் இருக்கிறார்கள், அதனால் அவர்களை ஆட்டு மந்தைகள் போல் அரசியல் கூட்டங்களுக்கு அழைத்து வருவதையும், அவர்களுக்கு 500 ரூபாய் ஒரு பிரியாணி என்ற நிலையில் அவர்களை பார்ப்பதையும் இந்த தேர்தல் மூலம் அரசியல் கட்சிகளுக்கு தெளிவான செய்தியை மாண்புமிகு மக்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

 ஒவ்வொரு வாக்கும் தேர்தலில் வெற்றியை உறுதி செய்யக்கூடிய உன்னத செயல் என்பதை இந்த தேர்தல் வெளிப்படுத்தி இருக்கிறது.

 ஒரு சட்டமன்றத் தொகுதியில் ஒருவாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் வாயிலாக அந்த செயல் வெளிப்படுகிறது.

 இனிமேலும் மக்களை ஒன்றும் தெரியாதவர்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தால், அது அந்த அரசியல்வாதிகளுக்குத்தான் பொருந்தும் என்பதை ஆணித்தரமாக இந்த 2026 ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள் தெளிவு படுத்துகின்றன.

 புதியதாக ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்துள்ள கட்சி அரசியல் அனுபவம் இல்லாமல் இருந்தாலும், மக்களின் எதிர்பார்ப்புகளை அறிந்து கொள்ள முயல வேண்டும். அதன்படி செயல்பட வேண்டும். அதை விட்டுவிட்டு அடுத்த கட்சி நிர்வாகிகளையும், அந்த தலைவர்களையும், தன் பக்கம் இழுக்கும் கேவலமான செயலையும் தவிர்க்க வேண்டும்.

 இன்றைய காலகட்டத்தில் அரசியலிலும் அரசாங்கத்திலும் ஊழல் தான் மிகப்பெரிய அழிவு சக்தியாக மக்கள் முன் நிற்கிறது.

 அதனை மெய்ப்பிக்கும் வகையில், இன்றைய முதல்வர் அவர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சியில், ஊழலே இல்லாத உண்மையான ஆட்சியை கொடுப்பேன் என்று உறுதிமொழி அளித்துள்ளார்.

 அந்த ஒன்றை அவரும், அவரை சார்ந்த அமைச்சர் பெருமக்களும், அவர் கட்சி பிரமுகர்களும் உறுதி செய்வார்களானால், அதுவே இந்த மக்களின் நம்பிக்கைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்
தேர்தல் கூட்டணி 

அரசியல் கட்சிகள் ஒவ்வொரு தேர்தலிலும், ஏதோ ஒரு கருத்தில் ஒன்றி, கூட்டணி அமைத்து, மக்களிடம் சென்று, வாக்குகளை கேட்பதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள்.

 பெரும்பான்மை ஆளுமை கொண்ட கட்சியுடன், பல்வேறு சிறிய கட்சிகள், அரசியல் பதிவு பெற்ற கட்சிகள், அங்கீகாரம் பெற்ற கட்சிகள், சாதி கட்சிகள், அமைப்பு கட்சிகள் போன்ற அனைத்தும், ஏதோ ஒரு வகையில் தங்களுக்கு சாதகமான அணுகுமுறை கொண்ட கட்சிகளுடம் ஒன்றிணைந்து, மக்களிடம் ஓட்டு கேட்க செல்கிறார்கள்.

 அரசியல் கட்சி என்பது தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் செய்யப்பட்ட ஒரு அமைப்பு. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சி, மக்களின் கட்சியாகும்.

 மக்களின் பங்களிப்பு இதில் மிக மிக முக்கியம் என்பதை தேர்தல் ஆணையம் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

 ஒவ்வொரு கட்சியும், ஏதோ ஒரு தனி மனிதரின் சொத்து போல், அவர்களின் வாரிசுகள் அதன் அனைத்து அதிகாரங்களையும், தன் வயப்படுத்திக் கொண்டு செயல்படுவதை பார்த்து வருகிறோம்.

 கட்சிக்காக குறிப்பிட்ட நாளுக்கு ஒரு முறை தேர்தல் வைத்து, அந்த கட்சி உறுப்பினர்களால், அதற்கான தலைவர் மற்றும் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

 ஆனால், ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட பெயர்களை, அந்த கூட்டத்தில் தெரியப்படுத்தி, எல்லோரிடமும் கையெழுத்து வாங்கப்படுவது தான் இன்றைய நடைமுறை செய்தியாக இருக்கிறது.

 இதனை தேர்தல் ஆணையம் முக்கிய பணியாக எடுத்துக்கொண்டு, தேர்தல் ஆணையமே, ஒவ்வொரு கட்சியின் செயல்பாடுகளையும், அதன் கட்சி பொறுப்பாளர்களையும் தேர்வு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

 ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி, ஏதோ ஒரு கொள்கையில் உடன்பட்டு பிற கட்சிகளுடன் தேர்தலை ஒன்றாக சந்திக்கின்றன.

 தேர்தல் முடிவுகள் தெரிந்த உடனே, அந்த கூட்டணி கட்சிகள் எதிர் எதிர் துருவங்களாக செயல்பட ஆரம்பிக்கின்றன.

 
கூட்டணி கட்சிகளாக, ஒன்றாக மக்களை சந்தித்ததன் காரணமாக, அவர்களை நம்பி வாக்களித்த வாக்காளர்களை புறக்கணித்துவிட்டு, தங்களின் சுய லாபத்திற்காக, கூட்டணியை முறித்துக் கொண்டு, எதிரெதிர் துருவத்தில் பயணிப்பது, மக்களின் வாக்கை புறந்தள்ளுவது போன்றதாகும்.

 இந்த நிலை ஏற்படும் போது, தேர்தல் ஆணையம் தேர்தலின் போது ஏற்பட்ட கூட்டணியை விட்டு மாறுபடும் கட்சியின் செயல்பாடுகளை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும், அவர்களை செல்லாக் காசாக்கி செயல்பட விடாமல் செய்ய வேண்டும்.இன்றைய சூழலில், தேர்தல் ஆணையம் செய்ய வேண்டிய மிக முக்கியமான பணிகளில் இது முதன்மையான பணியாகும்.

 அண்மையில் தமிழக சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தல் முடிவுகள் எதிர்பாராத திருப்பங்களை கொடுக்கக் கூடியதாக அமைந்தது. முதன்மையாக, திமுக கூட்டணியில் சில பல கட்சிகளும், ஆஇஅதிமுக கூட்டணியுடன் சில பல கூட்டணிகளும் மக்களை சந்தித்தனர்.

 அதன் அடிப்படையில் வாக்குகளை பெற்று சட்டப்பேரவை உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 இந்த சூழலில் ஆஇஅதிமுகவை சேர்ந்த 4 சட்டப்பேரவை உறுப்பினர்கள், தங்களை தேர்ந்தெடுத்த மக்களை கூட சென்று சந்திக்காமல், தாங்கள் எந்த கட்சியில் நின்று வெற்றி பெற்றோமோ, அந்தக் கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததோடு மல்லாமல், எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற நிலைப்பாட்டில், எந்த காரணத்தையும் கூறாமல், தங்களின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்கள்.

 அதற்கு சட்டப்பேரவை தலைவர், ஒரு சட்டமன்ற உறுப்பினர் ராஜினாமா செய்யும் போது அதற்கான காரணத்தை கூறத் தேவையில்லை என்று வக்காலத்து வாங்கி இருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

 ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் தாங்கள் சார்ந்த கட்ச்சியின் அங்கீகாரம் பெற்ற தலைவரின் ஒப்புதல் கையொப்பத்துடன், அந்த கட்சியின் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

 அங்கு அந்த தனிப்பட்ட நபர் எப்படிப்பட்டவர் என்பது ஒரு புறம் இருந்தாலும், அவர் சார்ந்திருக்கும் கட்சி மற்றும் அவருக்கான தேர்தல் சின்னம், முக்கிய பங்கு வைக்கிறது.

 அது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படுகிறது என்பதை உணர வேண்டும். ஒரு சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்று விட்டால், அவர் தனிப்பட்ட மனிதர் அல்ல. அந்த ஒட்டுமொத்த தொகுதி மக்களின் பிரதிநிதியாக அவர் செயல்பட கூடியவராக மாறிவிடுகிறார்.

 எனவே அவரின் செயல்பாடுகள் மக்களின் மனநிலைக்கு எதிராக ஒருபோதும் இருக்கக் கூடாது. இந்த நிலையில், திமுக கூட்டணியில் இடம் பெற்ற கூட்டணி கட்சிகள் அனைத்தும் தாங்கள் ஒன்றாக இணைந்து மக்களை சந்தித்து வெற்றி பெற்ற பிறகு, எதிர் அணியினருடன் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைக்கும் நிலையை இப்போது பார்த்து வருகிறோம்.

 தேர்தலில் நின்ற போது திமுக கூட்டணியின் தேர்தல் அறிக்கை மற்றும் அவர்களின் செயல்பாடுகளுக்கு மக்கள் அங்கீகாரம் அளித்தார்கள். அந்த மக்களின் வாக்கிற்கு எதிராக, வேறு ஒரு கூட்டணி கட்சி உடன் இணைந்து செயல்படுவதை தேர்தல் ஆணையம் உடனடியாக தடை செய்ய வேண்டும்.

மேலும் அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்ய வேண்டும். மக்களை எந்த நோக்கத்திற்காக, எந்த கூட்டணியுடன் யார் யாருடன் இருந்தார்களோ, அவர்கள் வேறு ஒரு கூட்டணியில் இடம் பெறக் கூடாது என்ற அடிப்படை தகவல்களை, தேர்தல் ஆணையம் தெளிவாக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் விளக்க வேண்டும்.

 அதனை நடைமுறைப்படுத்தி மக்களின் எதிர்பார்ப்புக்கு எதிராக செயல்படும் அரசியல் கட்சிகளில் தரம் தாழ்ந்த அரசியலை, தடுத்து நிறுத்த வேண்டும்.

 ஒரு சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராக தேர்தல் களம் காண வேட்பு மனு தாக்கல் மிக முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது.

 தேர்தல் ஆணையத்திற்கு அவர்கள் வழங்கும் தகவல்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும். பொய்யான தகவல்கள் கொடுக்கக் கூடாது. அதுபோல அவர்கள் எந்த கூட்டணி கட்சியில் தேர்தலை சந்திக்க விருப்பப்படுகிறார்களோ, அந்த கூட்டணி கட்சிக்கு எதிராக அவர்கள் ஒருபோதும் செயல்பட அனுமதிக்க கூடாது.

ஒரு கட்சியில் அந்தக் கட்சியின் தேர்தல் சின்னம் மூலம் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அந்த சட்டப்பேரவை உறுப்பினர் அந்த கட்சிக்கு முழுமையாக கட்டுப்பட்டவர் என்ற நிலையை தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும்.

 ஒரு கட்சியின் கொள்கைக்கு உட்பட்டு, அந்த கட்சி வேட்பாளராக தேர்தலில் களம் கண்டுவிட்டு, வெற்றி பெற்ற பிறகு, எக்காரணம் கொண்டும் அந்த கட்சிக்கு எதிராக செயல்பட முடியாத நிலையை தேர்தல் ஆணையம் அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.

 அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆஇஅதிமுக கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒரு குழுவாக தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவித்தது, அந்த உறுப்பினர்களை தேர்ந்தெடுத்த மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்ட செயலாகும்.

 இதனை தேர்தல் ஆணையம் தாமாக முன்வந்து தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும். இனிமேல் அது போன்ற நிகழ்வுகள் நடவாமல் இருக்கும் வண்ணம் தனது செயல்பாடுகளை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தெளிவுபடுத்த வேண்டும்.

 அரசியல் கட்சி என்பது ஒரு தனிப்பட்ட நபரின் ஆளுகைக்கு உட்பட்ட அமைப்பு அல்ல என்பதை தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும்.

 எப்படி வேண்டுமானாலும் தேர்தல் நடத்தலாம் என்ற வரையறையை, இப்படித்தான் தேர்தல் ஆணையம் மூலம் நடத்த வேண்டும் என்ற வழிமுறையை, தேர்தல் ஆணையராக இருந்த டிஎன் சேசன் அவர்கள் வழிகாட்டி சென்று இருக்கிறார்.

 இதன் மூலம் பெருமளவிலான முறைகேடுகள் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளால் செய்ய முடியாமல் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலுக்கு கட்டுப்பட்டு நடக்கின்றன.

 அதுபோல ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒவ்வொரு அரசியல் கட்சியின் கோட்பாடுகளும் அந்த அரசியல் கட்சியின் தலைவர்களால் பின்பற்றப்பட வேண்டும், இதனை மீறுபவர்கள் மீது தேர்தல் ஆணையமே நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற புரிதலை தேர்தல் ஆணையம் ஏற்படுத்த வேண்டும்.

 ஒரு தேர்தலை நடத்தி அதில் பெருவாரியான வாக்குகள் பெற்றவர்களுக்கு வெற்றிச் சான்றிதழை அளிப்பது மட்டும் தேர்தல் ஆணையத்தின் வேலை அல்ல.

 தேர்தல் அறிவிப்பு தொடங்கி, தேர்தல் நடத்துதல், தேர்தல் முடிவுகளை அறிவித்தல், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் கட்சி தாவலை தடுத்தல், தேர்தல் கூட்டணியில் இருந்தவர்கள் வேறு கூட்டணிக்கு செல்ல செல்லாமல் இருத்தல், வேறொரு கூட்டணியில் அங்கம் வகிப்பதை தடுத்தல் போன்ற அனைத்து பணிகளையும், செயல்பாடுகளையும் தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்த வேண்டும்.

 அப்போதுதான் அந்த சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுத்த மக்களின் எதிர்பார்ப்பு முழுமையாக பூர்த்தியாகும். இல்லையேல் அரசியல்வாதிகள் அரசியல் வியாபாரிகளாய் மாறி அவர்களின் ஆதிக்கம் மேலோங்கி ஜனநாயகம் படுதோல்வி அடைந்து விடும் என்பதை உணர வேண்டும்.

 தேர்தல் ஆணையம் மட்டுமே இதனை செய்ய வேண்டும் என்று மக்களும் அமைதியாக இருப்பது அரசியல்வாதிகளை மேலும் மேலும் தவறுகள் செய்யுங்கள் என்று அனுமதிப்பது போன்ற செயலாக அமைந்து விடும்.

 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் மூலம் தான் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்ற புரிதலை மக்கள் உணர வேண்டும். மக்கள் நலனுக்காக தான் சட்டமன்ற உறுப்பினர்கள் செயல்பட வேண்டும் என்ற அடிப்படை அறிவுடன் அவர்களை கேள்வி கேட்க மக்கள் ஒன்றுபட வேண்டும்.

 ஒன்றுபட்ட மக்களால் எதையும் சாதிக்க முடியும், அந்த மக்களின் கேள்விகளுக்கு அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும் அந்த விழிப்புணர்வு மக்களிடம் பரவ வேண்டும்.
உயிர்களின் அறிவு உருவங்களுக்கு உருவம் வேறுபட்டும் மாறுபட்டும் அமைந்திருப்பது இயற்கையின் சிறப்பாகும். 

நமது கை விரல்கள், ஒரே அளவில் இருக்குமானால், நாம் எப்படி செயல்படுவோம்? எவ்வாறு கையாள்வோம்? என்பதை சற்று சிந்தித்துப் பார்த்தால், விரல்களின் வேறுபட்ட அளவுகளினால் ஏற்படும் பயன் புலப்படும். 

அது போலத்தான், ஒவ்வொரு உயிரினங்களும், ஒவ்வொரு தன்மை கொண்டனவாக, உலகில் உலவி கொண்டிருக்கின்றன.

 தனக்கு நிகர் தான் தான், என்பதில் ஒவ்வொன்றும் பயணித்துக் கொண்டிருக்கின்றன. 

எறும்பு ஊர்ந்து செல்கிறது.ஆமை நகர்ந்து செல்கிறது. மீன்கள் நீந்தி செல்கின்றன ஆடுகள் நடந்து செல்கின்றன. 

முயல்கள் ஓடி செல்கின்றன. சிங்கமும் புலியும் தன் வலிமையை காட்டி செல்கின்றன. குரங்குகள் தாவித்தாவி செல்கின்றன. 

இப்படி ஐந்தறிவு கொண்ட உயிர் வாழினங்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு விதமாக பயணப்பட்டு, தன் வாழ்நாளை செலவிடுகின்றன.

 தங்களுக்குள் எவ்வித போட்டியோ, பொறாமையோ, வஞ்சமும், வன்முறையோ கொள்வதில்லை. 

காகம் பறந்து சென்றாலும், தனக்கு ஒரு இறை கிடைக்கும் போது, தன் இனத்தை கூவிக்கூவி அழைத்து, ஒன்று கூடி, ஒன்றுபட்டு உண்டு மகிழ்கின்றன.

 எந்த உயிரினமும், தன் தேவைக்கு அதிகமான எந்த பொருளையும், சேர்த்து வைக்கவும், சேர்த்துக் கொள்ளவும் நினைப்பதில்லை.

 அன்றாட தேவை அறிந்து, அதற்கு ஏற்ப உண்டு மகிழ்ந்து, அதனதன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றன. 

எல்லையற்ற வாழ்வு, எல்லையில்லா மகிழ்ச்சியில், எல்லா உயிரினங்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

 தனக்கு ஆறறிவு உள்ளது எனக்கூறும் மனிதன், இவற்றின் எல்லாவற்றிற்கும் எதிர்வினை ஆற்றுவதே, என் வேலையென்று, தன் வாழ்நாளை தொடர்ந்து கொண்டிருக்கிறான்.

 தான் மட்டும்தான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். தான் மட்டுமே செல்வ செழிப்போடு இருக்க வேண்டும். தனக்கு மட்டும் வேண்டிய எல்லாம் கிடைக்க வேண்டும். 

தனக்கு கிடைத்த எதுவும் பிறருக்கு கிடைக்கக் கூடாது. தன்னை மட்டுமே ஊரார் புகழ வேண்டும். தனக்கு மட்டுமே எல்லா இடங்களிலும் முதல் மரியாதை தர வேண்டும், என இன்னும் ஏராளமாய் தனக்கு மட்டுமே வேண்டும் என்று வாழ்ந்து வருகிறான் மனிதன்.

 இப்படி தன்னைப் பெருக்கில் வாழும் மனிதர்கள் ஆறு அறிவு படைத்தவர்களா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

 இன்பம் மட்டுமே வாழ்க்கை என்றால், அந்த வாழ்க்கை இன்பமயமாக இருக்காது. 

எல்லா நாட்களின் இருபத்து நான்கு மணி நேரமும், பகல் பொழுதாக இருக்குமானால், உயிரினங்களின் நிலை என்னவாகும்?.  

பகல் பாதி, இரவு பாதி என்பதனால் தான், ஒவ்வொரு நாளின் வேலை நேரம் போக, ஓய்வுக்கான நேரம் என உடலை பாதுகாத்துக் கொள்கிறோம்.

 உயர்ந்த மலை பிரதேசம் இருக்கும் இந்த பூமியில் தான், தாழ்ந்த பள்ளத்தாக்குகளும் இருக்கின்றன.

 நல்லவர்கள் வாழும் இந்த பூமியில் தான், கெட்டவர்களும் வாழ்கிறார்கள். எண்ணங்களை எடுத்துக் கொண்டால், நல்ல எண்ணம் கொண்டு இருப்பதும் உண்டு. 

தீய எண்ணம் கொண்டோரும் உண்டு. நாம் எந்த எண்ணத்தைக் கொண்டு வாழ்கிறோம், நம் மனதில் எத்தகைய எண்ணங்களை பதித்து வைத்திருக்கிறோம் என்பதில் தான் நம் தனித்தன்மை வெளிப்படுகிறது.

 மனம் தான் மனிதனை இயக்கும் கருவியாகும் . அந்த மனதின் உள்ளே குழுமியிருக்கும் என்ன குவியல்கள் நன்மை பயக்கும் நல்லெண்ணங்களாக இருக்க வேண்டும். 

நன்மை என்பதும் தீமை என்பதும், இடத்துக்கு இடம், ஆளுக்கு ஆள், மாறுபட்டுக் கொண்டு இருக்கும். வேறுபட்டுக் கொண்டே இருக்கும்.

 பொதுவான கோட்பாடாக, நமக்கும் பிறருக்கும், நாம் வாழும் நாட்டிற்கும், எவ்வித கேடும் விளைவிக்காத எந்த ஒரு எண்ணமும், செயலும், நல்லெண்ணமாக எடுத்துக் கொள்ளப்படும்.

 அளவுகோல் ஆளுக்கு ஆள், இடத்துக்கு இடம், மாறுபட்ட போதிலும், ஒரு எண்ணத்தினால் அந்த எண்ணத்தின் மூலம் செயல்படும் செயலினால், ஏற்படும் விளைவுகள் தான் நன்மை தீமையை தீர்மானிக்கும். 

"எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே" என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப, ஒவ்வொருவரின் வாழ்விட சூழல்கள் தான் அவரை நற்செயல் புரியவும், தீஞ்செயல் புரியவும் தூண்டுகின்றன. 

தெரியாமல் செய்யும் தவறுகள் மூலம் திருத்திக் கொள்ளவும், மாற்றிக் கொள்ளவும் வழிவகை உண்டு. தெரிந்தே செய்யும் தப்புகளின் பிடியிலிருந்து ஒருவரும், ஒருபோதும் தப்பிவிட முடியாது. 

உப்பைத் திண்றவன் தண்ணீர் குடித்தே தீர வேண்டும். மாற்று வழி கிடையாது. தற்காலிகமாக கிடைக்கும் தற்போதைய வெற்றி என்றும் வேண்டும் என்று நினைக்க  வேண்டும்.

 அதன் மூலம் நிறைய பேருக்கு பலன் கொடுக்கும் செயலைச் செய்ய வேண்டும். 

பாரில் நாம் சிறக்க நம் செயல்பாடு நல்லனவாக இருக்க வேண்டும். நன்மை செய்யும் நல் எண்ணமுடன் வாழ்பவர்கள் நல்ல செயல்களைச் செய்திட வேண்டும். 

அத்தகைய செயல்களை செய்வதற்க்கு நல்ல எண்ணங்களை மனதில் நிரப்ப வேண்டும். அதை தான் ஆன்றோர்கள், ஒன்றே செய், நன்றே செய், அதையும் இன்றே செய், என்று கூறி நமக்கு வழிகாட்டி சென்று இருக்கிறார்கள்.

 ஒரு ஊருக்கு செல்ல பல வழி தடங்கள் இருக்கின்றன. எந்த வழித்தடத்தில் சென்றால், எவ்வளவு நேரத்தில் செல்ல இருக்கிற இடத்தை சென்று சேரலாம் என்ற முடிவை, நாம் தான் அறிந்து ஆராய்ந்து செயல்படுத்த வேண்டும்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு எனும் வாக்கிற்கு இணங்க, ஒன்றுபட்ட எண்ணத்துடன், ஒன்றுபட்டு வாழ்ந்திட வேண்டும். 

பறவைகளுக்கு இல்லை போட்டி பொறாமை எனும் தீய குணங்கள். அவைகளின் அன்றாட தேவைகள் மட்டுமே, அவைகளின் தேவைகளாக எண்ணி வாழ்கின்றன. 

ஆனால், ஆறறிவு பெற்றோம், அகிலத்தை ஆள்வோம் என்ற ஆணவப் பெருக்கில் மனிதனின் செயல்பாடுகள் மனிதனை மட்டும் அளிப்பவை அல்ல.

 உலகத்தை உருகுலைக்கும் வகையில் தீய எண்ணங்களின் பெருக்கம்  அகிலத்தையே அச்சுறுத்துகின்றன  என்பதை ஆறறிவு கொண்ட மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டும்.
ஓட்டுநர் ஆன ஓனர் 

நாராயணன் தனக்கென கார் வைத்திருக்கவில்லை. தனக்கிருக்ககும் இருசக்கர வாகனத்தை மட்டுமே, அவசர தேவைக்கு பயன்படுத்தி வருபவர்.

 அவசியத் தேவை இல்லாமல் வாடகை கார் பயன்படுத்துவதில்லை. பொதுவாக  பேருந்தை மட்டுமே பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்.

 பயணத்தின் போது ஓட்டுநர்கள் கைபேசியை பயன்படுத்துவதை நாராயணன் விரும்புவதில்லை. 

ஒரு நாள் அலுவலக கோப்பில் முக்கிய அலுவலரின் கையொப்பம் வேண்டி, தருமபுரியில் இருந்து சேலம் வரை வாடகை காரில் பயணிக்க வேண்டி வந்தது.

 அன்றைய பயணம் குறித்த நேரத்தில் தொடங்கியது. செல்லும் வழியில் அவ்வப்போது ஓட்டுநர் தனக்கு வந்த கைபேசி அழைப்புகளை நறுக்குத் தெரித்தார் போல, அளவுக்கு அதிகமாக பேசாமல், விவரத்துடன் முடித்துக் கொண்டு பயணத்தை தொடர்ந்தார்.

 நாராயணனுக்கு அலுவலரிடம் அவசரமாக கையொப்பம் வாங்க வேண்டிய மனநிலையில் இருந்ததால், முதலில் ஓட்டுனரின் கைபேசி பேச்சை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
 இருந்த போதிலும் , தொடர்ந்து ஓட்டுநரின் போன் விழித்துக் கொண்டிருப்பதை, நாராயணனின் மன் ஏற்க்க வில்லை.

தனது பயணத்தின் முடிவின் போது ஓட்டுனரின் செயல் பற்றி அந்த நிறுவன மேலாளரிடம் கூற வேண்டும், என்ற மனநிலையில் பயணத்தை முடிக்க இருந்தார்.

 பயணத்தின் தொகை எவ்வளவு என கேட்க நினைக்கும் போது, ஓட்டுனர் ஐயா மன்னிக்கவும் வேறு வழியில்லாமல் ஒரு சிலருடன் உடனடி யாக தொடர்பு கொள்ள வேண்டிய நிலையில் உடனுக்குடன்  பேச வேண்டியதாயிற்று.

தாங்கள் தொடர்ந்து, எங்களுடைய நிறுவனத்தின் வண்டியை பயன்படுத்துவதால், நானே வண்டியை எடுத்து வந்திருக்கிறேன். 

இந்த நிறுவனத்தை நடத்திக் கொண்டிருக்கும் நான் தான் தங்களிடம் இவ்வளவு நாள் பேசி வந்தேன், என்ற போது நாராயணனுக்கு என்ன பேசுவது என்று தெரியாமல் , பயணத் தொகையை கொடுக்கும் போது மறக்காமல் நன்றி கூறிவிட்டு புறப்பட்டார்.
சேயிடம் (பாடம்) கற்ற தாய் 

லட்சுமியும் முத்துவும் காதல் திருமணம் செய்து கொண்ட  இளம் தம்பதியர்கள். முத்துவை விட லட்சுமி பொருளாதாரத்தில் வளம் மிக்க குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள்.

 இருந்த  போதிலும் முத்துவின் மேல் ஏற்பட்ட பிடிப்பின் காரணமாக பெற்றோரின் மறுப்பையும் சம்மதமாக மாற்றிய லட்சுமி, முத்துவை கரம் பிடித்தார். 

முத்துவுக்கு தன் பெற்றோர்களை தன்னுடனே வைத்துக் கொண்டு, அவர்களுடன் சேர்ந்து வாழ்வதைத் தவிர, வேறு எவ்வித தனிப்பட்ட ஆசையும் இல்லாதவர்.

முத்துவின் ஆசை, லட்சுமியின் மேல் ஏற்பட்ட காதல் வாழ்க்கையின் மூலம்,  அகப்படாமல் போய்விட்டது. 

தனி குடித்தனம், அதுவும் நகரத்தில் குடும்ப வாழ்க்கையை ஒட்ட வேண்டும், என்ற ஒத்திகையின் அடிப்படையில், லட்சுமியின் குடும்பத்தாரின் ஒத்துழைப்புடன் வாழ்க்கை பயணம் இனிதே பயணப்பட்டது.

 அதற்கு அத்தாட்சியாக, இவர்கள் இல்லத்தில் வெண்ணிலா என்ற செல்ல மகள் பூத்துக் மலர்ந்தாள்.

 மழலை மொழிக்கு மயங்காதவர் எவர் உலர். அதற்கு ஏற்றார் போல், முத்துவின் பெற்றோர்களும், லட்சுமியின் பெற்றோர்களும் வெண்ணிலாவின் விசிறிகளாக மாறினார்கள். 
 வெண்ணிலாவின் பேச்சும் செயலும் முத்து, லட்சுமி ஆகிய இருவரையும் தாண்டி, அருகில் இருப்பவரையும் அரவணைத்துக் கொண்டது. 

நாட்கள் நகர்ந்தன, வருடங்கள் ஓடின, அதனுடன் சேர்ந்து, வெண்ணிலாவும் தவழ்ந்து நடந்து ஓட ஆரம்பித்தாள்.

 வெண்ணிலா தனக்கு வேண்டிய பறவையையும் அதற்கான கூண்டையும், வேண்டி விரும்பி வாங்கிக்கொண்டாள் . 

அந்த பறவைகளுக்கு தேவையான உணவு தண்ணீரை தினமும் கொடுத்து வந்தாள். சில மாதங்கள் கழித்தவுடன், சிறு பறவைகளின் பெண் பறவை முட்டையிட்டது.

 இரண்டு பறவைகள் இருந்த கூட்டில் பெண் பறவை சிறிய பானையில் இருந்த துவாரத்தின் வழியாக உள்ளே சென்று முட்டையை அடைகாக்க ஆரம்பித்தது.

 தனிமையில் இருந்த ஆண் பறவை தான் தனிமைப்பட்டு விட்டோம் என நினைத்து, அதனை வெளிப்படுத்தும் விதமாக, புதுவிதமான  ஓசையை எழுப்ப ஆரம்பித்தது.

 இந்த செயல் வெண்ணிலாவிற்கு புதுமையாக தென்பட்டது.உடனே, அம்மாவை அழைத்து விவரம் கேட்டால் வெண்ணிலா.

 பெரியவர்களுக்கு தெரிந்த செய்தி சிறியவர்களுக்கு தெரிந்திடாத செய்தியாகும். வெண்ணிலாவின் கேள்வியில் பிடிப்பில்லாத லட்சுமி சாதாரணமாக கூறினாள்.

 பெண்குருவி முட்டையிட்டு இருக்கிறது. அதை அடைகாத்து குஞ்சு பொரிக்க, அந்த முட்டையை பாதுகாக்கும் வகையில் அமர்ந்திருக்கிறதெனக் கூறிய முத்து தன் வேலையில் கவனம் செலுத்தளானாள்.

 இந்த பதில் மூலம் வேறு ஏதோ ஒன்றை அறிய முற்படும் நோக்கில் வெண்ணிலாவின் கவனம் சென்றது.

 லட்சுமிக்கு வெண்ணிலாவின் கேள்வியில் விந்தை எதுவும் தெரியவில்லை. வெண்ணிலாவோ அந்த கேள்வியை வெறுமனே விட்டுவிடவும் நினைக்கவில்லை.

 அன்று மாலை முத்துவும் லட்சியமையும் அவரவர் பணிகளை முடித்துவிட்டு, இரவு உணவுக்காக அமர்ந்திருந்த வேலையில், வெண்ணிலா தனது பள்ளிப் பாடத்தை முடித்திருத்தாள்.

இந்த நேரத்தில் தனது மனதில் உறுத்திக் கொண்டிருந்த கேள்வியை அம்மாவிடம்  கேட்களானாள். பெண்  குருவி முட்டையை ஏன் அடை காக்க வேண்டும்? ஆண்குருவி தனியாக ஏன்  அலைந்து கொண்டிருக்கிறது? இது ஏனோ வித்தியாசமாக எனக்கு தென்படுகிறது, இதைப் பற்றி விரிவாக கூறவும் என்றாள் வெண்ணிலா.

 இப்போதும் வெண்ணிலாவின் கேள்வியில் வேறு எதுவும் இல்லை என்பது போன்ற தொனியில் லட்சுமியின் பதில் இருந்தது.

பெண் பறவை முட்டையிட்டுள்ளது, அதை அடைகாத்து, அதில் குஞ்சு பொரிக்கும் வரையில், அந்த முட்டையை பாதுகாக்கும், என்று கூறிவிட்டு தன் கவனத்தை தன் போக்கில் திருப்பிக் கொண்டாள் முத்து.

 இப்போது  வெண்ணிலாவிற்கு ஏதோ பொரி தட்டியது போல் அடுத்த கேள்வியை தொடுத்தாள்.

 இந்தப் பறவை தனது முட்டையை அடைகாத்து குஞ்சு பொரிக்கும், அதுவரை அந்த முட்டையை தன் பாதுகாப்பில் வைத்திருக்கும், என்று கூறினாயே, அதுபோல் நாம் ஏன் நம் உறவுகளுடன் ஒன்றாக வாழவில்லை என்று அம்மாவை கேட்டாள் வெண்ணிலா.

லட்சுமிக்கு என்ன பேசுவது என்று புரியவில்லை. திடீரென வெளிவந்த வெண்ணிலாவின் கேள்வி முத்துவை ஒரு நிமிடம் திக்கு முக்காட வைத்து விட்டது.

பல்வேறு சூழல்களில், சிறு பிள்ளைகளின் பேச்சு பெரியவர்களுக்கு புரியாமலேயே போய்விடுகிறது. 

ஏனென்றால், நாம் வளர்ந்து விட்டோம், நமக்கு எல்லாம் தெரியும் என்ற போக்கில் நம் செயல்பாடுகள் அமைந்துவிடுகின்றன. 

லட்சுமிக்கு ஏதோ பொரி தட்டியது போன்ற உணர்வு மேலோங்க வெண்ணிலாவிடம் வந்து அமர்ந்தாள். 

 குருவி முட்டை இட்டு அடைகாக்கிறது, அதை நம் குடும்பப் பின்னணியுடன் எவ்வாறு நீ தொடர்புபடுத்தி பேசுகிறாய் சற்று விளக்கமாக சொல் என்று முத்து கேட்டவுடன் வெண்ணிலா தொடர்ந்தாள்.

 நீங்கள் இருவரும் அலுவலகத்திற்கு சென்று விடுகிறீர்கள், நானும் பள்ளிக்கு சென்று வருகிறேன்.

 மாலையில் ஒன்றாக வீட்டில் இருக்கிறோம். ஆனால், தாத்தாக்கள் பாட்டிகள் அவரவர் வீட்டில் எங்கேயோ இருக்கிறார்கள். 

நாம் எல்லோரும் ஓர் இடத்தில் ஏன் வாழக்கூடாது? தாத்தாக்களுடனும் பாட்டிகளுடனும் மற்ற சொந்தங்களுடனும் இருக்கும்போது, என்னால் சொல்ல முடியாத மகிழ்ச்சி என்னுள் ஏற்படுகிறது. அதை எப்படி சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. 

சிறு குருவி தன் முட்டையை அடைகாக்கும் பெண் குருவி, தனியாக போய்விட்டதனால், ஆண் குருவி தவித்துக் கொண்டிருப்பது போல் என் மனம் நம் உறவுகளுடன் ஒன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறது என்று வெண்ணிலா கூறினாள் .

ஏதோ வேலையில் கவனமாக இருந்த முத்து அம்மாவும் மகளும் நீண்ட நேரமாக ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்து அருகில் வந்து அமர்ந்தார்.

 வெண்ணிலாவின் கேள்வி அதனைத் தொடர்ந்த பேச்சு, லட்சுமிக்கு எங்கோ பொறி தட்டியது போன்ற உணர்வை உண்டாக்கியது.

 லட்சுமி பேசத் தொடங்கினாள், வயதானவர்கள் நம்முடன் இருந்தால் நம்முடைய செயல்பாடுகள் பாதிக்கும் என்று தவறாக நினைத்து அவர்களை நம் வீட்டில் இல்லாமல் செய்து விட்டேன்.

 ஆனால் , என் செல்ல மகள் எனக்கு நன்றாக பாடம் புகுத்தி விட்டாள். உடனே நாம் பெற்றோர்களை அழைத்து வந்து நம் வீட்டில் வைத்துக் கொள்வோம் என்று முத்துவிடம் கூறினாள்.

 முத்துவிற்கு மனதில் மகிழ்ச்சி பெருக்கு அதிகரித்த போதிலும், வெளிக்காட்டிக் கொள்ளாமல் உன் விருப்பம் போல் செயல்படு என்று லட்சுமியிடம், பட்டும் படாமல் கூறினார் முத்து.

 ஏற்கனவே பலமுறை தன் பெற்றோர்களை அழைத்து வந்து தங்களுடன் வைத்துக் கொள்ள வேண்டுமென்று லட்சுமியிடம் கூறிய போதிலும், அது எடுபடாமல் போன ஏமாற்றத்தில் தன் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு சென்றவர் முத்து.

 தன் மகள் மூலம் இப்படி ஒரு இன்பமயமான திருப்பம் தன் வாழ்க்கையில் தென்படும் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை. 

அதிலும், நம்மை விட, மனிதர்களை விட, அறிவில் குறைந்த பறவைகள் மூலம், இப்படி ஒரு பாடத்தை வெண்ணிலா வழியாக, லட்சுமி பெற்றதை முத்து பெருமிதத்தோடு எண்ணி , தன் செல்ல மகளான வெண்ணிலாவை, முத்து வாரி அனைத்து கொண்டார்.



நூல் பெயர்         :பெஸ்டி ( நாவல் )

நூல் ஆசிரியர்    :இரா பாரதிநாதன் 

நூல் வெளியீடு   :புரட்சி பாரதி பதிப்பகம், சென்னை.

பக்கம் 112   விலை ரூ.135/-                       நூல் வெளியீடு 2025 

மனிதர்களில் ஆண் சாதி, பெண் சாதி அவர்களுடன் சேர்ந்து, ஆண்டவன் சாதி என்ற அலி யென்னும் மூன்றாம் பாலினம் இருப்பது நமக்கு தெரியும்.

 அது போல, ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமண வாழ்க்கை அமைவதையும் அறிந்திருக்கிறோம். அண்மை காலமாக, ஆண்களும் பெண்களும் திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ முடியும் என்ற புதிய நடைமுறையை மேற்கொண்டு வருவதையும் காண்கிறோம்.

 அதையும் தாண்டி, ஆணும் பெண்ணும் ஒன்றாக வாழ்ந்து கொண்டு திருமண உறவில் இணைத்துக் கொள்ளாமல், திருமண தம்பதிகள் போல் வாழ்க்கை முறையை நடத்தி வருபவர்கள் "பெஸ்டி" எனும் புதிய பந்தத்தை உருவாக்கி இருக்கிறார்கள் இன்றைய இளைஞர்கள்.

 இதை கேட்பதற்கும், பார்ப்பதற்கும் ஏற்றுக் கொள்ள முடியாத செயலாக தெரிந்த போதிலும், அந்த உறவு முறையில் வாழ்பவர்கள், அதிலிருந்து விடுபட முடியாமல் இருப்பதாக உணர முடிகிறது.

 இந்த "பெஸ்டி" எனும் உறவு குறித்த உயிரோட்டமான கதாபாத்திரங்களுடன் கூடிய நாவலை நூலாசிரியர் இரா பாரதிநாதன் வடித்துள்ளார்.

 பக்கத்துக்கு பக்கம், அத்தியாயத்திற்கு அத்தியாயம், அவர்களின் குடும்ப வாழ்க்கையின் அங்கமாகவே நம்மை அழைத்துச் செல்கிறார்.

 ஒரே சாதியை கொண்டவர்களும், ஒரே ஊரை சேர்ந்தவர்களுமான, ராகவனும் வேணியும் சிறுவயதிலிருந்து ஒன்றாக பழகியதால் அது காதலாக மாறிவிடுகிறது.

 படித்து வேலை தேடும் பருவத்தில் இருக்கும் இருவரும், தங்கள் காதலை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை. ஆனால், அவர்களின் பெற்றோர்கள் இவர்களின் காதலுக்கு ஆதரவு தெரிவிப்பதாக இல்லை.

 அதனால், இந்த கிராமத்தில் இருந்து அருகாமையில் உள்ள சேலம் நகரத்தை அடைந்து, அங்கிருந்து சென்னைக்கு சென்றுவிடலாம் என்ற திட்டத்துடன் இருவரும் அந்த கிராமத்தை விட்டு பயணப்படுகிறார்கள்.

 எதிர்பாராத சூழல் காரணமாக, இவர்கள் சேலம் பேருந்து நிலையத்தில் இருப்பதை வேனியின் உறவுக்காரர் கொடுத்த தகவலின் பெயரில், உடனடியாக சேலம் பேருந்து நிலையத்தில் சோதனை இடுகிறார் வேனியின் பெற்றோர்கள்.

 இதை வேணியும் ராகவனும் சற்று தூரமாக இருந்து கண்காணிக்கும் போது, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டு தப்பித்துக் கொள்ளும் நிலையில், ராகவன் ஒரு புறமாகவும், வேணி ஒரு புறமாக தப்பித்து விடுகிறார்கள்.

 ராகவன் உயிர் தப்பினால் போதும் என்ற நிலையில் ஓட்டம் பிடித்த போதிலும், வேணியை தொடர்பு கொண்டு, எப்படியாவது ஒன்று சேர வேண்டும் என்று, கைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சிக்கும் போது, நெட்வொர்க் பிரச்சனையினால், தொடர்பு ஏற்படுவதில்லை.

 சூழ்நிலை கருதி, ஓட வேண்டிய தூரம் ஓடி, களைத்து போய் சாலையில் சாய்ந்த போது, அந்த வழியாக காரில் வரும் செல்வி, ராகவனை காரில் அழைத்து ஆதரவு கரம் நீட்டி, சென்னைக்கு அழைத்து வந்து விடுகிறார்.

 முழு விவரத்தையும் தெரிந்து கொண்ட செல்வி தான் வேலை செய்யும் மென்பொருள் நிறுவனத்தில் வேலை வாங்கி கொடுத்து, தான் தங்கி இருக்கும் குடியிருப்பிலேயே தங்கிட வழி ஏற்படுத்திக் கொடுக்கிறார்.

 இப்படியே இவர்களுக்கு உள்ளான நட்பு, ஆழமான நட்பாக உருமாறுகிறது. எல்லை மாறாத நட்பு, இருவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துகிறது.

 இந்த சூழலில் இவர்கள் பணி புரியும் மென்பொருள் நிறுவன வேலை வாய்ப்பு நேர்காணலில் போது, வேணி வந்திருப்பது ராகவனுக்கு தெரிய வருகிறது.

 எப்போது வேணியை காண்போமோ என்று இருந்த ராகவனுக்கு இன்ப அதிர்ச்சியாக இந்த நிகழ்வு அமைகிறது.

 வேணிக்கும் அதே மென்பொருள் நிறுவனத்தில் வேலை கிடைத்திட, செல்வியின் உதவியால், நியமன ஆணை உடனே வழங்கப்படுகிறது.

 இந்த நிலையில், வேணி அன்றைய இரவு சேலம் பேருந்து நிலையத்தில் தப்பித்து எவ்வாறு சென்னை வந்தார், என்ற விவரம் ராகவனுக்கு தெரிய வருகிறது.

 பிறகு ஒரு குறிப்பிட்ட நாளில் செல்வியின் தலைமையில் ராகவனுக்கும் வேணிக்கும் திருமணம் நடைபெறுகிறது.

 இந்த சூழலில் ராகவன் செல்வியிடம் இதுவரை இருந்த நட்பு வேணியின் உறவால், வேணி மனைவி என்ற முறையில், தவறாக புரிந்து கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்.

 என்னதான் நண்பர்களாக இருந்தாலும், கணவன் மனைவி என்ற உறவுக்கு வந்த பிறகு, ராகவன் செல்வியுடன் இருக்கும் நட்பை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாத நிலைக்கு வேணயின் மனநிலை மாறிவிடுகிறது.

 இதனைத் தொடர்ந்து இவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் அன்றாட நிகழ்வுகளின் வெளிப்பாடுகள், மூவரையும் முக்கோணமாக மாற்றி விடுகிறது.

 இந்த மூன்று கோணமும், ஒரு கோணமாக மாறுகிறதா? அப்படி மாறுவதற்கான சூழல் எப்படி அமைகிறது? என்பதை ஆழமான தனது எழுத்துக்கள் வாயிலாக, இந்த நாவலின் வழியே, நம்மை அழைத்துச் செல்கிறார் நூல் ஆசிரியர்.

 சிறப்பான கதாபாத்திரங்கள் வழியாக, அவர்களின் வாழ்க்கையின் நிகழ்வுகளை வாசகர்களுக்கு தந்திருக்கிறார். அவசியம் படிக்க வேண்டிய நாவல்.